Monday, March 7, 2016

யாரும் இறங்கா நிலையம்

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer